மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் நேற்று (14) இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுமியின் பெற்றோர் ஆட்டோவை வீதியில் மடக்கிப் பிடித்ததையடுத்து, கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஆட்டோவை கைவிட்டு தப்பியோடியுள்ளார். பின்னர் மயக்கமடைந்த நிலையில் இருந்த சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சிறுமியின் தந்தை அவரை ஆங்கில வகுப்பிற்காக தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மழை காரணமாக வகுப்புகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டதால், அருகிலுள்ள உறவினர் வீட்டில் சிறுமியை இறக்கிவிட்டு அவர் கடைக்குச் சென்றுள்ளார்.
அதன்பின், சிறுமி வீடு வரவில்லை என உறவினர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, தந்தை உடனடியாக அங்கு சென்றுள்ளார். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஆட்டோ ஒன்று அவரைக் கண்டதும் பின்னோக்கி சென்று தப்பிக்க முயன்றுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் தந்தை காரில் ஆட்டோவை துரத்திச் சென்று ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் மடக்கிப் பிடித்துள்ளார். அப்போது ஆட்டோ சாரதி வாகனத்தை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

ஆட்டோவின் பின்பகுதியில் மயக்கமடைந்த நிலையில் இருந்த சிறுமி மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், “ஆட்டோ உரிமையாளர் தனது நண்பர்” எனக் கூறி வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் குறித்த நபரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் மீட்கப்பட்டதுடன், தப்பியோடியிருந்த பிரதான சந்தேகநபரும் இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும், அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். மேலும், பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் 15 மற்றும் 16 வயது சிறுமிகளை குறிவைத்து, காதலிப்பதாக நடித்து அணுகும் இளைஞர் குழு தொடர்பிலும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.








