இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16 அன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாட்டில் அதிகரித்து வரும் சிறுமிகளின் கர்ப்பம் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாய நிலைகள் குறித்து கடும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே சிறுமிகள் தாய்மார்களாக மாறும் சம்பவங்கள் அதிகரித்து வருவது ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் குறைவாக இருப்பதும், பெற்றோரின் அதிக வேலைப்பளு காரணமாக பிள்ளைகளுடன் போதிய நேரம் செலவிடப்படாமையும் இதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.
பெற்றோரிடம் கிடைக்காத அன்பை வெளிநபர்களிடம் தேடும் சூழலில், சில சிறுமிகள் தவறான தொடர்புகளுக்கு ஆளாகின்றனர் என்றும், இது தொடர்பான பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடும் இந்நிலையை மோசமாக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேவையற்ற கர்ப்பங்களால் சிறுமிகளின் கல்வி, எதிர்காலம் மற்றும் குழந்தைப் பருவம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பொலிஸ் எச்சரித்துள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில், பெற்றோர்கள் பிள்ளைகள் பயமின்றி தங்கள் பிரச்சினைகளை பகிரக்கூடிய குடும்ப சூழலை உருவாக்க வேண்டும் என்றும், சமூக ஊடகப் பயன்பாட்டை கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, அந்நியர்களை நம்ப வேண்டாம், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பகிர வேண்டாம் என சிறுமிகளுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஆபத்து அல்லது துஷ்பிரயோகம் ஏற்பட்டால் உடனடியாக 119, 118, 109 அல்லது 107 ஆகிய அவசர உதவி எண்களுக்கு தகவல் வழங்குமாறும் Sri Lanka Police கேட்டுக்கொண்டுள்ளது.








