மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்ததைத் தொடர்ந்து, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தனது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் வெளியிட்ட காணொளி அறிக்கையில், ஜனாதிபதியுடன் தொடர்பு கொள்ள முடியாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்லப்போவதாக முன்பே எச்சரித்திருந்ததாக தேரர் கூறினார்.
ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது அவரைச் சந்திக்க முயற்சி செய்ததாகவும், ஆரம்பத்தில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது முந்தைய கருத்துகளுக்குப் பிறகு, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும் தமக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்ததாக தேரர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் கிழக்கு மாகாணம் தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் மக்களின் கவலைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்ததாகவும், அவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி தமக்கு செவிமடுத்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்த தேரர், ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை அவருக்கு தனது “அதிகபட்ச ஆதரவை” வழங்குவதாக கூறினார்.
அத்துடன், தான் “ராஜபக்ஷ நிகாய” என விவரித்த அணியிலிருந்து விலகுவதாகவும், நாட்டை நேர்மறையான திசையில் முன்னேற்ற ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.








