இலங்கையின் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அதிகப்படியான கடன் வழங்கலால் உருவாகக்கூடிய பொருளாதார அபாயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி புதிய நிதியியல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்கள், தங்கத்தின் விலை மற்றும் சொத்து சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான ஏற்ற இறக்கங்கள், நாணய மாற்று விகிதங்களில் காணப்படும் நிலைமாற்றங்கள் மற்றும் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகள் காரணமாக வாகன விலைகள் மேலும் உயரக்கூடிய சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபை எடுத்துள்ள இந்தத் தீர்மானம் இன்று (25) முதல் அமுலுக்கு வருகிறது.
தங்கக் கடன்களுக்கு என்ன மாற்றம்?
புதிய விதிகளின்படி, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்கக் கடன்களுக்கான கடன் மதிப்பு விகிதம் (Loan-to-Value Ratio – LTV) 70 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
LTV என்றால் என்ன?
ஒருவர் 100,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை அடகு வைத்தால், இதற்கு முன்பு 80,000 அல்லது 90,000 ரூபாய் வரை கடன் கிடைத்திருக்கலாம். ஆனால் புதிய விதிப்படி அதிகபட்சமாக 70,000 ரூபாய் மட்டுமே கடனாக பெற முடியும்.
அதாவது, தங்கத்தின் மதிப்பை விட அதிகளவில் கடன் வழங்கப்படுவதை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
மேலும், நாளை முதல் புதுப்பிக்கப்படும் அல்லது மீள வழங்கப்படும் பழைய தங்கக் கடன்களுக்கும் இந்த 70% வரம்பு பொருந்தும்.
வாகனக் கடன்களுக்கும் கட்டுப்பாடு
மோட்டார் வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் கடன்களுக்கான தற்போதைய அதிகபட்ச LTV வரம்புகளும் மேலும் 10 சதவீத புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, முன்பு ஒரு வாகனத்தின் மதிப்பில் 70% வரை கடன் வழங்கப்பட்டிருந்தால், இனி அது 60% ஆகக் குறையலாம். இதனால் வாகனம் வாங்குபவர்கள் முன்பைவிட அதிக முன்பணத்தை (Down Payment) செலுத்த வேண்டிய நிலை உருவாகலாம்.
ஏன் இந்த நடவடிக்கை?
மத்திய வங்கியின் தகவலின்படி, கடந்த சில மாதங்களாக தங்கக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.
தங்கத்தின் விலை திடீரென குறைந்தாலோ அல்லது வாகனங்களின் சந்தை மதிப்பு சரிந்தாலோ, கடன் வழங்கிய நிதி நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல், மக்கள் அதிகளவில் கடன் சுமையை ஏற்றுக்கொள்வதும் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
“மெக்ரோபிரூடென்ஷியல் கொள்கை” என்றால் என்ன?
மெக்ரோபிரூடென்ஷியல் (Macroprudential) கொள்கை என்பது முழு நிதி அமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் மத்திய வங்கிகள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.
அதாவது, ஒரு வங்கி அல்லது ஒரு நிறுவனம் மட்டுமல்லாமல், முழு நாட்டின் வங்கி மற்றும் நிதி அமைப்பில் நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்காக இவ்வாறான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
- பொதுமக்களுக்கு ஏற்படும் தாக்கம்
- தங்கத்தை அடகு வைத்து பெறும் கடன் தொகை குறையலாம்.
- வாகனம் வாங்க அதிக முன்பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- கடன் பெறுவது சற்று கடினமாகலாம்.
- ஆனால் நீண்டகாலத்தில் வங்கி மற்றும் நிதி அமைப்பின் பாதுகாப்பு வலுப்பெற உதவும்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் குறுகிய காலத்தில் கடன் பெறுவோருக்கு சிரமங்களை ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் நிதித்துறையில் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்து பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றன.










