அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்று எட்டப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் (கச்சா எண்ணெய்) விலைகள் கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளன. அதே நேரத்தில், இந்த நேர்மறையான அரசியல் நகர்வுகள் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் கணிசமான உயர்வைக் பதிவு செய்துள்ளன.
ஈரான் அரசுடனான அமைதி ஒப்பந்தம் பெருமளவில் பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்றும், அதன் முழுமையான விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார். எனினும், அதற்கு அடுத்த நாளே, இந்த உடன்படிக்கையை அவசரப்பட்டு முடிக்க வேண்டாம் என்று தனது நாட்டின் பேச்சுவார்த்தைக் குழுவை அவர் வலியுறுத்தியுள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறானதொரு தற்காலிகத் தேக்கநிலைக்கு மத்தியிலும், நேற்று (24) காலை ஆசிய சந்தை நிலவரங்களின்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை 5% இனால் சரிந்து பேரல் ஒன்று 98.36 டொலராகப் பதிவாகியிருந்தது. அதேநேரம், அமெரிக்க சந்தையில் வர்த்தகமாகும் மசகு எண்ணெய் (WTI) விலை 5.3% இனால் சரிந்து பேரல் ஒன்று 91.50 டொலராகக் காணப்பட்டது.

உலகளாவிய முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகச் சேர்க்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் இதற்கு முன்னர் கூறியிருந்த போதிலும், அதுகுறித்த கூடுதல் விபரங்கள் எதனையும் அவர் தற்போது வரை வெளியிடவில்லை.
உலகின் மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) ஐந்தில் ஒரு பகுதி பொதுவாகக் கடந்து செல்லும் இந்த மிகக் குறுகிய, அதேநேரம் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை, கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மத்திய கிழக்கில் மோதல்கள் தொடங்கியதில் இருந்து முற்றாக மூடப்பட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதன் காரணமாகவே, உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் மற்றும் முதலீட்டுப் பிரிவுகள் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








