ஹட்டன் – டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் இருவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், விளக்கமறியல் காவலில் இருந்தபோது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையத்துடன் இணைந்திருந்த குடியிருப்பில் வயோதிப தம்பதியினர் இருவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர், பொகவந்தலாவை பகுதியில் மறைந்து இருந்தபோது பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர், இன்று அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், அவரைப் பற்றிய தகவல்கள் யாருக்கேனும் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு நடைமுறைகள்!
இந்த இரட்டைக் கொலை வழக்கில் சந்தேகநபரை வெறும் 48 மணிநேரத்திற்குள் கைது செய்தமை குறித்து பொலிஸார் பாராட்டுகளைப் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது அதே சந்தேகநபர் காவலில் இருந்தபோதே தப்பிச் சென்றிருப்பது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, கொலை போன்ற கடுமையான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்த ஒருவர் வைத்தியசாலையிலிருந்து எவ்வாறு தப்பினார்? பாதுகாப்பு அதிகாரிகள் போதுமான கண்காணிப்பில் இருந்தார்களா? என்ற கேள்விகளுக்கு பதில் தேவைப்படுவதாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
சந்தேகநபரை விரைவில் மீண்டும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








