மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அவர்களின் தந்தை நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறி, போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிச்சை எடுத்து மோசடி செய்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட தாயாரை பார்வையிடுவதற்காக, குழந்தைகள் தங்களது தந்தையுடன் பதுளையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்திருந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 3 வயதுடைய ஆண் குழந்தையும் 5 வயதுடைய பெண் குழந்தையும் மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த தந்தை பயன்படுத்திய அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டபோது, அது வேறு ஒருவருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது.
அந்த அடையாள அட்டையின் உண்மையான உரிமையாளர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும், அவரது அடையாள அட்டை 2023ஆம் ஆண்டு காணாமல் போனதால் அவர் புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு தற்போது கடவத்தையில் வசித்து வருகிறார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அடையாள அட்டையை தன்னுடையது என கூறி, அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட நபர் பல மோசடி நடவடிக்கைகளில் பயன்படுத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் பொய்யானது என்றும், அவரது மனைவி தற்போது மாத்தறையில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தனது மனைவிக்கு புற்றுநோய் உள்ளது என கூறி பல இடங்களில் பிச்சை எடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு எதிராக அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அனுராதபுரம், கொழும்பு உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் உள்ளதுடன், பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது தாயாரையும் விசாரணைக்காக அழைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








