கொஹுவல வுட்லண்ட் மாவத்தை சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “தாது மந்திர்” திறப்பு விழா நேற்று மாலை பக்திப்பூர்வமாக நடைபெற்றது. அமரபுர தர்ம ரக்ஷித மகா நிகாயவின் அநுநாயக்கர், வணக்கத்திற்குரிய வதகெதர விமல புத்தி அநுநாயக்க தேரரால் இந்த புதிய தாது மந்திர் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மகா சங்கத்தினருடன் பெருந்திரளான பௌத்த மக்களும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதன் பின்னர் ஊடகங்களுக்கு விசேட கருத்துக்களைத் தெரிவித்தார். இவ்வருடம் மே மாதத்தில் இரண்டு வெசாக் போயா தினங்கள் வருவது குறித்து எழுந்துள்ள சர்ச்சை மற்றும் கலந்துரையாடல்கள் பற்றி ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, மகாநாயக்க தேரர்கள் கூறும் கருத்துக்களையும் எடுக்கும் முடிவுகளையும் நாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், அது சரியா தவறா என்பது நமக்குரிய பிரச்சினை அல்ல என்பதால் அதனை நம்மால் கேள்விக்குட்படுத்த முடியாது என்றும், மகாநாயக்க தேரர்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தால் நாம் அதற்கு இணங்கி, தலைவணங்கிச் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இம்முறை வெசாக் பண்டிகைக்கான ஏற்பாடுகள் குறித்து வினவியபோது, தாம் எப்போதும் போல சாதாரணமான முறையிலேயே இம்முறையும் வெசாக் தினத்தைக் கொண்டாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.








