பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை Family Planning Association of Sri Lanka நிறைவேற்றுப் பணிப்பாளர் Rushitha Perera தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தங்களது அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை வழங்கும் நடைமுறை கடந்த ஆண்டே உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோன்று, அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச மற்றும் தனியார் துறைகளில் இந்த நடைமுறையை அமல்படுத்த முடிந்தால் அது முக்கிய முன்னேற்றமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாதவிடாய் காலத்தில் பெண்களின் நலனைக் கவனிப்பது சமூகப் பொறுப்பு என்பதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை இந்த முயற்சியில் இணைத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உலகளவில் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களுக்கான வரிகளை நீக்குதல் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையிலும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களுக்கான வரிகளை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் இந்த உத்தியோகபூர்வ கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.








