மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் பெரியகல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த மின் கம்பம் மற்றும் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் தாக்கத்தால் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், வாகனத்தில் பயணித்த நால்வரும் காயமடைந்தனர்.
சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை இடிபாடுகளிலிருந்து மீட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து தொடர்பான தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








