ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் இடம்பெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக, தனது 11 வயது சகோதரியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுவனை பொலிஸார் இன்று (30) கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (28), ஏறாவூர் 5ஆம் குறிச்சி நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற 11 வயது சிறுமி, வீட்டிலுள்ள குளியலறையின் தண்ணீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சம்பவம் நடைபெற்ற வேளையில், சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணியாற்றி வந்ததுடன், தந்தை வேலைக்காக வீட்டிற்கு வெளியே சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், 14 வயது சகோதரனும் 11 வயது சகோதரியும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, சிறுமி பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியை தமக்கு வழங்குமாறு சகோதரன் கேட்டதாகவும், அதற்கு சிறுமி மறுத்ததையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதன்போது சிறுமியின் கழுத்தை நெரித்ததால் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சம்பவத்தை மறைக்க முயன்ற சிறுவன், சகோதரியின் உடலை குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், வேலை முடித்து வீடு திரும்பிய தந்தை பிள்ளைகளைத் தேடியபோது, குளியலறை தண்ணீர் தொட்டியில் மயக்கநிலையிலிருந்த சிறுமியை கண்டுள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 14 வயது சிறுவன் குற்றச்செயலுடன் தொடர்புடையவர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.








