மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22வது ஆண்டு நினைவு தினம், இன்றைய தினம் (31) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கலந்துகொண்ட பிரமுகர்களினால் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.











தமிழ் பேசும் சமூகத்தின் குரலாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் உண்மை நிலவரங்களை அச்சமின்றி வெளிக்கொணர்ந்த ஒரு மூத்த ஊடகவியலாளராகவும் விளங்கிய நடேசன் அவர்களின் இழப்பு, பிராந்திய ஊடகத்துறைக்கு என்றும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என இதன்போது உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களின் அஞ்சலியைச் செலுத்தினார்கள்.








