மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு புகைத்தலே முக்கிய காரணமாக உள்ளதாகவும், புகைத்தல் அற்ற மாவட்டமாக மட்டக்களப்பை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாவட்ட தொற்றாநோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ருதேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச புகையிலை ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாளை முன்னிட்டு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதன்போது, புகைப்பொருள் பாவனையற்ற மாநகர சபையாக மட்டக்களப்பு மாநகர சபையை பிரகடனப்படுத்தும் வகையில் விசேட பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் முச்சக்கரவண்டிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் ஒட்டப்பட்டன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதார அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் எம். ருதேசன், உலகளவில் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக விளங்கும் தொற்றாநோய்களுக்கு புகைத்தல் முக்கிய ஆபத்துக் காரணியாக இருப்பதாக குறிப்பிட்டார்.

மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு புகைத்தல் காரணமாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும், வர்த்தக ரீதியான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் காரணமாக விழிப்புணர்வு முயற்சிகள் முழுமையாக மக்களை சென்றடைவதில் சவால்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையை புகைத்தல் அற்ற பகுதியாக மாற்றுவதற்கு மாநகர சபை, கல்வித் துறை, வர்த்தகத் துறை மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், பாடசாலைகள், வைத்தியசாலைகள், மாவட்ட செயலகம் மற்றும் சுகாதார அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கும் மாணவர்களுக்கும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் டாக்டர் ருதேசன் வலியுறுத்தினார்.

















