அனுபவமில்லாத ஒரு குழுவினரின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்ததன் காரணமாக நாடு கடுமையாக சீரழிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட பலமண்டலக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும், ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து வருகின்றதாகவும் கூறினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் தெளிவான திட்டம் இல்லையென குற்றம் சாட்டினார்.
முன்னாள் ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தற்போதைய உலக பொருளாதார சூழ்நிலையை ஒப்பிட்டுக் கூறிய அவர், இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான சூழலில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திறன் கொண்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு விரைவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க எதிர்பார்ப்பதாகவும், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.








