இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் (Faculty of Islamic Studies and Arabic Language) புதிய பீடாதிபதியாக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் அவர்கள் மூன்று (03) ஆண்டுகள் காலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2026 ஜூன் 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், நடைபெற்ற பீட சபையின் விசேட கூட்டத்தில் இத்தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்வின்போது உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் நிர்வாகத் துறைகளில் நீண்டகால அனுபவத்தையும் சிறப்பான பங்களிப்புகளையும் கொண்ட கல்வியாளரான கலாநிதி ஜெஸீல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளர் (Grade I) ஆகப் பணியாற்றி வருகிறார்.
கல்முனைக்குடியைச் சேர்ந்த கலாநிதி ஜெஸீல், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரிகத்துறையில் கலைமாணி (B.A. Hons.) பட்டத்தையும் பின்னர் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து மலேசியாவின் தேசியப் பல்கலைக்கழகமான Universiti Kebangsaan Malaysia (UKM) இல் இஸ்லாமிய தலைமைத்துவம் (Islamic Leadership) தொடர்பான ஆய்வின் மூலம் கலாநிதிப் (PhD) பட்டத்தை 2010 ஆம் ஆண்டு பெற்றார். மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி கற்பித்தல் தொடர்பான சான்றிதழையும் (CTHE) பெற்றுள்ளார்.








