“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற மகுடத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்யும் சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கான பிரதான நிகழ்வு, பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் தலைமையில் நேற்று (02) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரஜாசக்தி உறுப்பினர்கள், சமூக சக்தி திட்டப் பயனாளிகள் மற்றும் பல்வேறு சமூக முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
சமூக சக்தி திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் நலன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக சுமார் 27 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியின் ஊடாக சிறிய அளவிலான ஆடைத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குதல், சிறுகைத்தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குதல், மிராகேணி வாராந்த சந்தைக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட ஆறு முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் நேரடியாகப் பயனடையவுள்ளதுடன், பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








