நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கடுமையாக கொந்தளிக்கும் அபாயம் நிலவுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (04) காலை 10.30 மணி முதல் நாளை (05) காலை 10.30 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், கடல் அலைகளின் உயரம் 2 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், மீனவர்கள், கடல்சார் தொழிலாளர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவிற்கு மேற்பட்ட பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் மற்றும் திடீர் பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.








