தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரும், ‘இயக்குநர் இமயம்’ எனப் போற்றப்பட்டவருமான பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரைப்பட வரலாற்றில் கிராமிய வாழ்க்கை முறையையும், மண்ணின் மணத்தையும், மனித உணர்வுகளையும் இயல்பாக திரையில் பதிவு செய்து புதிய சினிமா மொழியை உருவாக்கியவர் பாரதிராஜா. 1977 ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ உள்ளிட்ட பல மறக்க முடியாத படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார்.
சினிமாவை நகர்ப்புற எல்லைகளிலிருந்து கிராமங்களுக்கு கொண்டு சென்ற இயக்குநராகவும், யதார்த்தமான கதைக்களங்கள் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மூலம் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவராகவும் அவர் போற்றப்பட்டார். தனது திரைப்பணிக்காக தேசிய விருதுகள் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இயக்குநராக மட்டுமன்றி, நடிகராகவும் பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு, அவரை மனரீதியாக பெரிதும் பாதித்திருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் முன்னர் தெரிவித்திருந்தன.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.








