மொணராகலையிலிருந்து பதுளை நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ தனியார் பேருந்தின் ஓட்டுநர் கடுமையான மதுபோதையில் பேருந்தை இயக்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (04) காலை பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை – பசறை பிரதான வீதியில், உடவெல மகா வித்தியாலயத்திற்கு அருகில் மாணவர்களுடன் பேருந்து ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பதுளை பொலிஸ் தலைமையகத்திற்கு அவசர தொலைபேசி தகவல் கிடைத்ததையடுத்து, போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பேருந்தை வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பேருந்தின் ஓட்டுநர் கடுமையான மதுபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில், பதுளை நகரிலுள்ள நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 40 பேர் பேருந்தில் பயணித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








