பாதுக்கை, மாதுலாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையில் உள்ள பௌத்த பாடல்களை (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகள் உள்ளிட்ட ஒலிப்பதிவு உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுக்கை பொலிஸாருக்கு விகாரையின் தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பாதுக்கை, வட்டரெக ஜயமுதுகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்கள் பின்னர் மற்றொருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர் என்றும், கைது நேரத்தில் அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.








