காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பு, நாளை (11) காலை 10.30 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின் படி, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மறுஅறிவிப்பு வெளியாகும் வரை காங்கேசன்துறை – மன்னார் – கற்பிட்டி கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியமும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.








