மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாயும், அவருக்குப் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹசலக, மினிப்பே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான எச்.எம். ஸ்வர்ணமலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினரின் தகவலின்படி, கர்ப்பகால பரிசோதனைகளின் போது குழந்தை வழமையை விட அதிக வளர்ச்சியடைந்திருந்ததால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் ஆரம்பத்தில் பரிந்துரைத்திருந்தனர்.
எனினும், மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாதாரண பிரசவத்தை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில், இறுதியில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பெண் சிசு உயிரிழந்ததுடன், தாயின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஸ்வர்ணமலா, கடந்த 6ஆம் திகதி அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இந்த இரு உயிரிழப்புகளும் மருத்துவ அலட்சியத்தின் விளைவாக ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








