நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட கடல்சார் வானிலை முன்னறிவிப்பின் படி, சிலாபம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசந்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். மேலும், திருகோணமலை, முல்லைத்தீவு, காங்கேசந்துறை மற்றும் கல்பிட்டி முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீற்றர் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசந்துறை – மன்னார் – கல்பிட்டி கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், அந்தப் பகுதிகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, திருகோணமலை முதல் காங்கேசந்துறை மற்றும் கல்பிட்டி முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடலில் பலத்த காற்று வீசுவதால் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.








