இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டும் என அகில இலங்கை கடற்றொழிலாளர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள இழுவைமடித் தொழில் இலங்கை வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 60 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த இழுவைமடித் தொழில் மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், அது இந்திய மீனவர்களுக்கு சாதகமானதாக இருந்தாலும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலாளர் பிரச்சினை இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக முன்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து, இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








