அனுமதிப்பத்திரமின்றி சுமார் 6,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையை லொறி ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து குளியாபிட்டிய நோக்கி ஹட்டன் வழியாக கழிவுத் தேயிலை கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் லொறி, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரால் நிறுத்தப்பட்டது.
சோதனையின்போது, உரிய அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக பெருமளவு கழிவுத் தேயிலை ஏற்றிச் செல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், கழிவுத் தேயிலை மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








