பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கான நிவாரணங்களை விரைவாக வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேக்கர தலைமையில் நடைபெற்றுள்ளது.
கடந்த 9ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், யுத்தக் காலத்தில் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸ் உறுப்பினர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவர்களது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில், பயங்கரவாதச் செயல்கள் காரணமாக உயிரிழந்தவர்கள், நிரந்தர ஊனமுற்றவர்கள் அல்லது உடல்நலக் காரணங்களால் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களை மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சின் பிரதிநிதித்துவத்துடன் மருத்துவக் குழுவொன்றை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், இந்த மருத்துவக் குழுவின் சேவைகளை நாடு முழுவதும் பிரதேச மட்டத்திற்கு விரிவுபடுத்தி, நிவாரணம் பெறத் தகுதியானவர்களை எளிதில் அடையாளம் கண்டு உதவிகளை வழங்குவதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிவாரணங்களை எதிர்பார்த்து நாட்டின் பல பகுதிகளில் உள்ள முன்னாள் மற்றும் தற்போதைய பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், முப்படைகளின் மருத்துவ வளங்களைப் பயன்படுத்தி விரைவான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், தகுதி பெற்ற அனைவருக்கும் நிவாரணங்கள் தாமதமின்றி சென்றடைவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








