அம்பாறை மாவட்டத்தில் நீண்ட கால கோடை வெப்பத்திற்குப் பின்னர் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மழையுடன் இணைந்து வீசிய கடும் காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் விபத்து அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் மல்வத்தை உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்பு திட்டங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும், கனமழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்துடன் உள்ளதாகவும், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பிரதான வீதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








