ஹொரண பகுதியில் 14 வயதுடைய தனது மகளை நீண்டகாலமாக தாக்கி சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி காயங்களுடன் ஹொரண மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடலில் பல்வேறு காயங்களும் தாக்குதலுக்கான அடையாளங்களும் காணப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சிறுமி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக் கட்ட விசாரணைகளில், தாய் தனது மகளை நீண்டகாலமாக தொடர்ச்சியாகத் தாக்கி வந்ததுடன், உடல் ரீதியாக கடுமையாக துன்புறுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் விளைவாக சிறுமி கடுமையான மன உளைச்சல் மற்றும் உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








