யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையின் சடலம், உரிய கட்டணம் அறவிடப்படாமலும் வழமையான நடைமுறைகள் பின்பற்றப்படாமலும் தகனம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பிரதேச சபையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி விளாவெளி இந்து மயானத்தில் குறித்த உறுப்பினரின் தந்தையின் சடலம் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், மயான பயன்பாட்டுக்கான கட்டணம் அப்போது அறவிடப்படவில்லை என கூறப்படுகிறது.
பின்னர் இந்த விடயம் ஏனைய உறுப்பினர்களின் கவனத்திற்கு வந்ததையடுத்து, சபைக் கூட்டங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, சம்பவம் இடம்பெற்ற சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர், கடந்த மே 25ஆம் திகதி அவசரமாக கட்டணம் அறவிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையாக, மயானத்தில் சடலத் தகனத்திற்காக விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தல், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் அதிகாரப்பூர்வ அனுமதி பெறுதல் ஆகிய நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். ஆனால் குறித்த சம்பவத்தில் அவை கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண உள்ளூராட்சி நியதிச் சட்டங்களின்படி, பிறப்புச் சான்றிதழ், மரணச் சான்றிதழ், கிராம அலுவலர் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும், பிரதேச சபையால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரமும் இன்றி தகன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த சடலத் தகனத்தில் நடைமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படும் நிலையில், உறுப்பினருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பில் கடந்த சபைக் கூட்டத்திலும் உறுப்பினர்கள் விளக்கம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








