தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகிலுள்ள அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பெருமளவிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, அரியமான் கடற்கரைக்கு அண்மையில் உள்ள தோப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை சோதனையிட்டபோது, இலங்கைக்கு கடத்தும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் எட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த இந்த மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தோப்பின் உரிமையாளர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய நாட்டுப்படகுகள் தொடர்பிலும் க்யூ பிரிவு பொலிஸாரும் சுங்க அதிகாரிகளும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.








