உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் சர்வதேச யோகாசனப் போட்டியில் ஐந்து பதக்கங்களை வென்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள ஏகா அரங்கில் நடைபெற்ற “முதல் உலக யோகாசனப் போட்டி – 2026” நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் தரம் 10 மாணவி துவிஷா ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும், மட்டக்களப்பு புனித வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
76 நாடுகளைச் சேர்ந்த 522 போட்டியாளர்கள் பங்கேற்ற சர்வதேச மட்டப் போட்டியில், இலங்கை மாணவிகள் வெளிப்படுத்திய திறமையும் அர்ப்பணிப்பும் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
இவர்களின் இந்த சாதனை, அவர்களது பாடசாலைகள் மற்றும் குடும்பங்களுக்கு மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்திற்கும் முழு இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்வி மற்றும் விளையாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








