குருநாகல் – புத்தளம் பிரதான வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது 5 வயது குழந்தையை கையில் ஏந்தியபடி வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, புத்தளம் நோக்கிப் பயணித்த பேருந்தொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் குழந்தையும் உடனடியாக நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








