எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியத் திட்டம் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருப்பதாகவும், அதனடிப்படையிலேயே எரிபொருள் விலை தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் ஒரு லீட்டர் டீசலின் உண்மையான விலை 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, 392 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ச்சியான நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த மானியத் திட்டத்தை நீண்டகாலத்திற்கு தொடர்வது சிரமமானதாக இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜூன் மாதத்துடன் மானியத் திட்டம் நிறைவடையவுள்ள நிலையில், எதிர்கால எரிபொருள் விலை தொடர்பான தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.








