ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் யின்ஷான் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர், ஜனாதிபதியின் நேரடியான மற்றும் தொலைநோக்குப் பார்வையுடைய தலைமைத்துவம் காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், கொழும்பு துறைமுக நகர் சிறப்பு பொருளாதார வலயத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கி வரும் ஊக்குவிப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கை பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதையும் பாராட்டினார்.
சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் முக்கிய பங்காற்றுகின்றன என வலியுறுத்தினார்.
முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளையும், கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையையும் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு பயனளிக்கும் முதலீடுகளுக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், கொழும்பு துறைமுக நகரை முன்னேறிய பொருளாதார மையமாக மாற்றுவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக சைனா ஹார்பர் நிறுவனத்திற்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.








