அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக அவரது மனைவி முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து, அவருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பி தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
சுரேஷ் சலேவின் மனைவி திருமதி எச். பி. எம். எஸ். பி. சலே (மனோரி சலே) சமர்ப்பித்த மேன்முறையீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2026.06.08 அன்று அஸ்கிரி விகாரைக்கு வருகை தந்த அவர், தனது கணவருக்கு உரிய நிவாரணம் வழங்க உதவுமாறு நேரில் கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மேன்முறையீட்டு மனுவின் பிரதியும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி கவனத்தில் கொண்டு, நியாயமான முறையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுரேஷ் சலே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.








