மட்டக்களப்பு மாவட்டத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மறுநாளே அதன் உரிமையாளரின் வீட்டின் முன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தபாலக வீதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் நேற்று இரு நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவாகியிருந்ததுடன், அதனை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை திருடப்பட்ட அதே மோட்டார் சைக்கிள் மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் வெளியே வந்த வீட்டு உரிமையாளர், காணாமல் போன தனது மோட்டார் சைக்கிள் மீண்டும் அதே இடத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.
மேலும், வாகனத்துடன் அதன் ஆவணங்கள் மற்றும் தலைக்கவசமும் எந்தவித சேதமும் இன்றி மீண்டும் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








