யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த மீனவர்கள் குழுவின் லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய மற்றொரு லொறி அதனுடன் மோதியுள்ளது.
மோதலின் தாக்கத்தால் உரம் ஏற்றிய லொறி, மீனவர்கள் இருந்த லொறியின் மீது கவிழ்ந்ததன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இரு மீனவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், மற்றொரு மீனவர் பலத்த காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








