அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தடுப்புக்காவலில் இருந்தபோது ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே, இதுவரை தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடவில்லை என்றும், உணவு மற்றும் நீரை உட்கொள்வதை தொடர்ந்து மறுத்து வருவதாகவும் மனோரி சலே கூறினார்.

மேலும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அமர்ந்திருக்கவும் பேசவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கை மற்றும் கால்களில் பலவீனம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
சுரேஷ் சலேவின் உயிரை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் ஊசிகள் மற்றும் திரவச் சிகிச்சைகள் மூலம் சிகிச்சை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, தம்மை குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைக்காக அழைத்ததாகத் தெரிவித்த மனோரி சலே, அண்மையில் சுரேஷ் சலேவை ஆடைகளைக் களைந்து சோதனை செய்த சம்பவத்தை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் உத்தியோகபூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.








