சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் நாட்டில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார், இவ்வாறான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைவான நீதியை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன்மடு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அண்மையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியின் தந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்படுவது சிறுவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களும் சமூகமும் எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், கிராம உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுப் பிரதிநிதிகள் இணைந்து சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், போதைப்பொருள் விற்பனை, சட்டவிரோத மதுபான உற்பத்தி உள்ளிட்ட சமூக விரோத செயல்களைத் தடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகள் மற்றும் ஒரே பெற்றோருடன் வாழும் சிறுவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விரைவான தீர்ப்புகளை வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, இவ்வாறான கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், சமூக விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.








