அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டில், அந்தப் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் பின்னர், சந்தேகநபர்களை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணைகளின் படி, கடந்த மே மாதம் நடைபெற்ற பாடசாலை விளையாட்டு நிகழ்வொன்றின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வேறு பாடசாலையொன்றிலிருந்து வந்திருந்த 15 வயது மாணவர் ஒருவர், பாடசாலை வளாகத்திற்குள் அமைந்திருந்த ஒதுக்குப்புற இடமொன்றில் வைத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் கைபேசி மூலம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு பின்னர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அம்பலாந்தோட்டை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களைத் திரட்டும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.








