2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என்றும், பரீட்சையை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் வழிகாட்டி நூலின்படி, உயர்தரப் பாடத்திட்டத்தை முழுமையாக கற்பிக்க 300 பாடசாலை நாட்கள் தேவைப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2026 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள், கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை மொத்தம் 343 பாடசாலை நாட்கள் கற்றலைப் பெற்றிருப்பதால், தேவையான காலத்தை விட அதிகமான கற்பித்தல் நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு, முந்தைய பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இம்முறை பரீட்சை நடைபெறும் நாள் வரை நான்கு மாதங்களும் 10 நாட்களும் தயாராகுவதற்கான கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, பரீட்சைக்குத் தயாராகுவதற்கு போதுமான காலம் வழங்கப்பட்டுள்ளதால், 2026 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கவோ அல்லது அதன் கால அட்டவணையை மாற்றவோ எந்தத் தேவையும் இல்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








