களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி 10 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, முறைப்பாட்டாளரிடமிருந்து ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபாவைப் பெற்றிருந்த அவர், மீதமுள்ள 9 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்காக களுத்துறையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றுக்குச் சென்றபோது ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








