காலி மாவட்டத்தின் ஜின் ஆற்றுப் பகுதியில், வக்வெல்ல பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (23) மாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், உயிரிழந்த நபரின் முகம் சேதமடைந்திருந்ததுடன், அவரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அவரது கால்கள் கொன்கிரீட் தூணுடன் இணைக்கப்பட்டு இறுக்கமாக கட்டப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், குறித்த நபர் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக சடலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் பொத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வக்வெல்ல பாலம் அருகே சிக்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை சடலத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது 40 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








