கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற கரைவலை மீனவர்களின் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிளிநொச்சி மாவட்டம் பல்வேறு துறைகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அடுத்த கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது அரசியல் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களால் வழிநடத்தப்படுபவை அல்ல என்றும், மக்களின் நலனை முன்னிறுத்தியே கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பல்வேறு அரசியல் தரப்பினருடன் ஒரே மேடையில் கலந்துகொண்ட போதும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், எதிர்காலத்திலும் இந்த விடயத்தை தொடர்ந்து முன்வைப்பேன் என்றும் தெரிவித்தார்.








