நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் எதிர்பாராத விதமாக அதிகரித்து வரும் நிலையில், சிக்குன்குனியா நோயும் மீண்டும் பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர, டெங்குவுடன் சேர்த்து சிக்குன்குனியா நோய்த்தாக்கமும் தற்போது அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு பரவும் அபாய நிலை தீவிரமாகக் காணப்படுவதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய ஜூன் 24 முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 48,287 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 29 மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பதிவான மொத்த நோயாளர்களில் 52 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன், அந்த எண்ணிக்கை 25,167 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், டெங்கு அதிஅவதான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளதுடன், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சில மருத்துவமனைகளின் கொள்ளளவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.








