கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தெளிவாக உள்ளதாகவும், அதனை உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய சில பொது மன்னிப்புகள் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பியதுடன், கடந்த காலங்களில் அந்த நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சட்டத்தின் கீழ் தவறாக வழங்கப்பட்டதாக கூறப்படும் சில பொது மன்னிப்புகளை மீளாய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நிலுவையில் உள்ள சட்டப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உரிய முறையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








