மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் பிரிவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணி தொடர்பான விவகாரம் மீண்டும் விசனத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
குறித்த காணியை 2026 ஜூன் 21 ஆம் திகதி நில அளவை நடவடிக்கைக்காக அதிகாரிகளால் பார்வையிடப்பட்டதாகவும், அங்கு சில இளைஞர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இதற்கு முன்னர் இதேகுழுவினர் காணியை அடைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டபோது பிரதேச இளைஞனர்கள் போராட்டம் செய்ததுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் இது அரச காணி எனவும் இது ஒரு வடிகால் எனவும் அறிவித்தல் ஒட்டப்பட்டு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.

எனினும், 2025 நவம்பர் மாதம் முதல் 2026 ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அல்லது நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் காணி மாபியாக்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து செயற்படுவதால் தான் இன்னும் இந்த விவகாரம் தள்ளிபோகின்றதா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை வழங்குவதுடன், காணியின் சட்ட நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த விடயம் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய முக்கிய பிரச்சினையாக உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.









