இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூலை 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இன்று (26) கடமை நிமித்தம் விடுமுறையில் இருந்ததால், வழக்கு நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கை முன்-விசாரணை மாநாட்டிற்காக ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியான கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டியே, சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.








