வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கில், வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் காணி உரிமையாளருமான சாருஜன் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்குடன், தையிட்டி விவகாரம் தொடர்பான ஏனைய வழக்குகளும் கடந்த 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் நேற்று (03) நீதிமன்றத்தில் ஆஜராகி, சட்டத்தரணி கஜேந்திரன் ஊடாக மனு தாக்கல் செய்தனர்.
மனுவை பரிசீலித்த மல்லாகம் நீதிமன்றம், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமை தொடர்பில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப் பெற்று, வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.








