2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் (08) நிறைவடைகிறது.
கடந்த ஜூன் 25ஆம் திகதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அனைவரும் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வேறு எந்த முறையிலும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள “Our Services” பிரிவின் கீழ் இடம்பெற்றுள்ள “Exam Information Centre” ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். புதிய விண்ணப்பதாரர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல் காணொளியைப் பார்வையிடுவது அவசியம் என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
ஒரு பாடத்திற்கான மறுபரிசீலனைக் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கடன் அட்டை, வரவு அட்டை அல்லது தபாலகங்கள் ஊடாக கட்டணத்தைச் செலுத்த முடியும்.
கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவானதை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழியில் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், செலுத்தப்பட்ட கட்டணம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீள வழங்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.








